-ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்-
வெலிகம பிரதேசசபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதான சந்தேகநரை பொலிஸார் பகிரங்கமாக வைத்து விசாரணை செய்தமை தவறு என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பிரிஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனேயே பொலிஸ் அதிகாரிகள் அவரை விசாரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது மற்றும் குற்றப் புலன் விசாரணைகள் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சந்தேகநபர்களை ஊடகங்களின் முன் நிறுத்துவது, அவர்களை வாக்குமூலங்களை வழங்கச் செய்வது மற்றும் அத்தகைய காட்சிகளைப் பரப்புவது பொதுமக்களின் ஒரு பிரிவினருக்கு உற்சாகத்தை அளிக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கைகள் வழக்கு விசாரணை ஆரம்பமானதுடன் இறுதியில் அரசுத் தரப்புக்குப் பாதகமாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தச் சிறுபிள்ளை த்தனமான செயல்கள் பொலிஸாரின் பிம்பத்தை மேம்படுத்தாது மாறாக, அவை எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். இது புலனாய்வாளர்களின் நிபுணத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், முழு அமைப்புக்கும் இழிவு தேடித் தரும், என்றும் கூறினார்.
நீதியை உறுதிப்படுத்தவும், சட்டம் மற்றும் அமுலாக்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும், உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும், விசாரணைகளின் நேர்மையைப் பேணுவதும் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


















