-தலதா அத்துக்கோரல குமுறல்-
சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை, அவை பாராளுமன்ற உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளது என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து பாராளுமன்ற சமையலறையை துப்பரவு செய்கிறார். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. எனவும் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மாறுப்பட்ட அரசியல் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் அனைவரும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொது இலக்குடன் ஒன்றிணைந்துள்ளோம். இந்த ஒன்றிணைவு அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது.
ஜனநாயகம் இல்லாதொழிந்தால் அது ஒட்டுமொத்த மக்களுக்கு மக்களின் வாழ்க்கையையும் அழிக்கும். ஆகவே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உண்டு.
75 ஆண்டுகால அரசாங்கங்களை சாபம் என்று விமர்சித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததது. 75 ஆண்டுகாலத்தை சபிக்கும் இந்த ஆட்சியாளர்கள் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகிய துறைகளின் உச்சபயனை பெற்றுக்கொண்டார்கள்.
போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளாத இளம் தலைமுறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் வெறுப்பு பேச்சுக்கு உத்வேகமடைந்து ஆதரவளித்தார்கள்.
வெகுவிரைவில் அவர்கள் உண்மையை விளங்கிக்கொள்வார்கள். சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை. பொலன்னறுவையில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து பாராளுமன்ற சமையலறையை துப்பரவு செய்கிறார்.
கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாகவுள்ளது. பதவி காலம் முடிவடைந்தவுடன் வீடு செல்ல வேண்டும் என்பதை சபாநாயகர் நினைவில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் – என்றார்.


















