குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட வாய்ப்பளிக்குமாறு அவரது மனைவியும், சட்டத்தரணியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு 02 கடிதங்களை அனுப்பி அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பான வழக்கு நேற்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவரது தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, தினமும் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் அவரது மனைவியும் மகனும் அவரைப் பார்வையிட அனுமதித்து உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடுப்புக் காவலில் சிகிச்சை பெற்று வருவதால், இவ்வாறானதொரு உத்தரவைப் பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இப்பின்னணியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை தினமும் பார்வையிட அனுமதிக்குமாறு கோரி சுரேஷ் சலேயின் மனைவி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதேவேளை, சுரேஷ் சலேயின் சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கட்சிக்காரரை தினமும் பார்வையிட அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவரது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தமக்கு தொழில்முறைப் பொறுப்பு இருப்பதாக அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனது கட்சிக்காரருடன் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை தினமும் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும், நியாயமான விசாரணையை நடத்துமாறும் கோரி நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் பால்திய சந்திக்கு அருகில் இன்று (11) அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
















