முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையானது இம்மாதத்திற்குள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அமைச்சின் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவை இதுவரை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே இந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துசேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.
இதற்கு முன்பும் இரண்டு தடவைகள் இந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இந்த முல்லைத்தீவு கொழும்பிற்கான சொகுசுப்பேருந்து சேவைதொடர்பில் பேசியிருந்தேன். விரைந்து இச் சேவையை ஆரம்பிக்குமாறும் கோரியிருந்தேன்.
அதற்கான பதில்கள் கிடைக்குமென எதிர்பார்கின்றேன். தயவுசெய்து இந்த சொகுசுப் பேருந்துசேவையினை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் இதற்கு அமைச்சின் அதிகாரிகள் பதிலளிக்கையில்,
கூடியவிரைவில் இந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் 15ஆம் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுசார்ந்த கூட்டமொன்று இடம்பெறும். அக்கூட்டத்தில் இந்த சொகுசுப் பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும்.
அந்தவகையில் இம்மாத இறுதிப்பகுதிக்குள் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

















