இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்சேவை உத்தியோகபூர்வ ஆவணங்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான விநியோகத்தை மேம்படுத்த பதிவாளர் நாயகம் திணைக்களமும் தபால் அலுவலகத்திற்குமிடையிலான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
தற்போது 2021 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது பொதுமக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சியை ஒரு ‘வரலாற்று மைல்கல்’ என்று அமைச்சர் அபேரத்ன பாராட்டியுள்ளார். இந்த சேவையை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்காக தபால் அலுவலகத்துடன் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும் என்று குறிப்பிட்டார்.


















