-இ.கலைஅமுதன்-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
இப்பேச்சுவாரத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்முடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திப்புக்கான தினத்தையும், நேரத்தையும் ஜனாதிபதி செயலகம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு அறிவித்துள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்துதல் மற்றும் திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு அடாத்தாக நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழ் அரசுக் கட்சியினர் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவர் எனப்படுகின்றது.


















