அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
தலாவவில் இருந்து நொச்சியாகம நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று பிற்பகல் வீதியில் இருந்து விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பேருந்து பயணித்த மிகவும் ஒடுங்கிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்க முற்பட்டபோது குறித்த பேருந்து கவிழ்ந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், வலயக்கல்வி காரியாலயத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சாதாரண தர கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற மாணவர்களும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் தம்புத்தேகமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

















