-நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன்-
தொல்லியல் அல்லது தொல்பொருள் இடம் என்றாலே அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகிறார்.
இவ்வாறானவர்களின் தலையீடுகள் தொல்லியல் விடயங்களில் இருக்கும்போது இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் இடங்களை அடையாளம் காணும் விடயத்தில் கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அங்கு இப்போது உள்ளூராட்சி சபைகள் இயங்கிக் கொண்டிருந்தன. உள்ளூராட்சி சபைகளின் மேற்பார்வை மற்றும் ஆளுகையில் அந்தக் காணிகள் இருக்கின்றன. இதன்போது திடீரென அங்கு தொல்லியல் இடங்களுக்கான பதாகைகள் அமைக்கும் போது அங்கு முறுகல் நிலையொன்று ஏற்படுகின்றது.
மட்டக்களப்பில் இப்போது மிக மோசமான மத குருவொருவர் இருக்கின்றார். அவர் கெட்ட வார்த்தைகளையும் பேசுவார். இனமுறுகல்களை ஏற்படுத்துவார். நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் கூட்டங்களை நடத்தும் போது எமது பிரதேசத்தில் தொல்லியல் இடங்கள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஜனாதிபதி கடந்த வாரம் எங்களை அழைத்து இலங்கைத் தினத்தை கொண்டாடி நாங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேவேளை மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைகள், தலைவர்கள், உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு தெரியாமல் அங்கே தொல்லியல் இடங்களுக்கான அடையாளப்படுத்தல்கள் நடக்கின்றன. அங்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
நாங்கள் சட்டத்தை மீறி செயற்பட விரும்பவில்லை சட்டத்தின் படி நடக்கவே விரும்புகின்றோம். ஆனால் இன நல்லிணக்கத்தை குழப்பக்கூடாது.
கடந்த காலங்களில் சந்தேகத்திற்கிடமான விடயங்கள் நடந்துள்ளன. குருந்தூர் மலைப் பகுதியில் பௌத்த சின்னங்களை போட்டுவிட்டு அங்கு பௌத்த சின்னங்கள் இருந்ததாக மிகிந்தலையில், உள்ள மதகுருவொருவரே கூறியுள்ளார்.
மண்முனை மேற்கு போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரோ அகற்றியுள்ளனர். தொல்லியல் எனும்போது அது இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் இடங்களாக இருக்கலாம்.
ஆனால் கடந்த காலங்களில் தொல்லியல் எனும்போது அவை பௌத்த கலாச்சாரத்திற்கான இடமாக காட்டுகிறார்கள். அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒருவர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். அவர் கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகின்றார்.
இவ்வாறானவர்களின் தலையீடுகள் தொல்லியல் விடயங்களில் இருக்கும்போது இன நல்லிணக்கம் பாதிக்கப்படும். இதனால் பொறுப்பு வாய்ந்த அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர் பிரச்சினையின்றி தீர்ப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.















