வரவு – செலவுத் திட்டக் காலப்பகுதியில் பாராளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அதன் ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை தற்போது மேலதிக ஆய்வுக்காக பாராளுமன்றத்தின் துறைசார் பிரதானிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தில் 9 திணைக்களங்கள் உள்ள நிலையில், சுமார் 850 ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் இணக்கப்பாடு கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டக் காலப்பகுதியில் குறித்த எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஊழியர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

















