இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி காலை 9.30 முதல் 10 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10முதல் 11வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 3.30 வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.
ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
இலங்கைப் போக்குவரத்து சபையை வலுப்படுத்துவதற்காக உரிய முறையியலொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி)
இனங்களின் அல்லது மதங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்குப் பெயரிடுவதைத் தடை செய்தல் ( ரவி கருணாநாயக்க)
பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல் ( ரீ.கே. ஜயசுந்தர)
பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுக்கவியல் விடயதானங்களை உள்ளடக்குதல் (ருவன் மாபலகம)
தேசிய மருந்துகள் தர உத்தரவாத ஆய்வுகூடத்தை உரிய முறையில் தொழிற்படவைப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (கவிந்த ஹேஷான் ஜயவர்தன)
விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டமொன்றை ஆரம்பித்தல் (ரோஹண பண்டார)
மாலை 3.30 முதல் 5.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 19(2) இன் பிரகாரம் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின்
சுதந்திரத்தை உறுதி செய்ய சபையின் தலையீட்டைக் கோருதல் தொடர்பான எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















