நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் புகார் ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


















