கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது பாலர் பாடசாலையின் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ட்டிக் கதிரைகள் மற்றும் மின் அளவையும் எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் தீ வைப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கையில்,
இந்த கோழைத்தனமான செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருபோதும் குற்றவாளிகள் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.
அரச சொத்தை சேதப்படுத்திய இத்தகைய அநாகரிகமான செயலை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது.


















