சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஆண் – பெண் சமத்துவம் மற்றும் சித்திரவதை ஒழிப்பினை முன்னிலைப்படுத்திய 16 நாள் செயற்திட்டம் குறித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களும் சம உரிமையுடன் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தல், சமூக ஆரோக்கியத்துடனும், சமூக பாதுகாப்புடனும் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மேலும், பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம் மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 என்ற இலக்கம், இலங்கை கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு தெரியப்படுத்த முடியும் .
மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின், 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி உலகம் முழுவதும் சுமார் 315 மில்லியன் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.















