புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் வன் டெக்ஸ்ட் இனிஸியேட் டிவ் என்ற அமைப்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான அரகலய மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும்.
அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும். இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறிய வேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்க முடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் ஒருமித்த நாடு மற்றும் ஏக்கிய இராச்சிய உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின. தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.


















