புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு – செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2026 வரவு – செலவுத் திட்டம் ஏழைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகின்றது.
பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நாங்கள் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்களே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்களைக் ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
உங்களைப் போன்று வைராக்கியத்துடன் நாங்கள் செயற்படப் போவதில்லை. அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என்றார்.


















