நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 7 கிலோ கிராம் 21 கிராம் ஹெரோயின், 4 கிலோகிராம் 715 கிராம் ஐஸ், 1 கிலோகிராம் 968 கிராம் கஞ்சா, 32,111 கஞ்சா செடிகள், 425 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 14,711 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 886 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் 1,284 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 15 பேர் அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















