ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 378 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 295 கிராம் ஐஸ், 10 கிராம் 470 மில்லிகிராம் கொக்கெய்ன், 728 கிராம் கஞ்சா, 201,691 கஞ்சா செடிகள், 3 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 4 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 241 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 850 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,012 சந்தேகநபர்களும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 1,032 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 42 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















