மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகரசபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மன்னார் பொது வைத்தியசாலையை சூழ உள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் மன்னார் நகர சபை சுகாதர பரிசோதகர் மற்றும் மன்னார் நகர சபை சுகாதார குழுவினர் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே மேற்படி சுகாதார நடை முறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த உணவகங்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமல் இயங்கி வந்த வெதுப்பகம், மருத்துவ சான்றிதழ் இன்றி பணிபுரிந்த ஊழியர்கள், அதிகளவான இளையான்கள், சுகாதார நடைமுறையை பின்பற்றாது உணவுகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார பிரச்சினைகளின் அடிப்படையில் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது .

அதன் அடிப்படையில் குறித்த உணவகங்களுக்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















