மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏ-9 வீதியில் இடம்பெற்றது.
கொழும்பு நோக்கி பயணித்த காரின் சக்கரம் காற்று போன நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே பயணித்த வேனுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வானுடன் குறித்த கார் மோதியது.
முதல் விபத்தில் சிக்கிய வேன் தடம் புரண்டுள்ளது. வேனில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் பிரதேச மக்களின் உதவியுடன் வெளிவேற்றப்பட்டனர்.
விபத்துக்குள்ளான மற்ற வேனின் சாரதி விபத்தை தவிர்க்க முயற்சித்த போதிலும், குறித்த வேனும் விபத்துக்குள்ளாகி உள்ளனது. குறித்த வேனில் பயணித்தவர்களும் சிறு காயங்களுடன் வெளியேறினர்.
குறித்த விபத்து காரணமாக ஏ-9 வீதி ஊடான போக்குவரத்து 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பித்தது.
விபத்தினை ஏற்படுத்திய காரினை பிரதேச மக்கள் இணைத்து வீதி போக்குவரத்துக்கு தடை இல்லாதவாறு அப்புறப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு 1990 இலக்க சேவையை பெற்றுக்கொள்ள அழைத்தபோது, குறித்த சேவையை அணுக முடியாத நிலை காணப்பட்டமையை தொடர்ந்து அவ்வீதி ஊடாக பயணித்த தேர்தல்கள் திணைக்கள வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.















