–பா.சதீஸ்-
முல்லைத்தீவு, முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை, கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணிக்கு உலகத் தமிழரின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் முள்ளியவளை பரிமத்தியா மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவீரர்களது பெற்றோர் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக முன்னாள் போராளிகளான அச்சுதன், தரண்சிறி ஆகியோரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



















