இந்திய அரசின் நிதியுதவியில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல் இன மும்மொழிக் கல்விப் பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்து பாடசாலையைத் திறந்து வைத்தனர்.
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவௌ, வடமத்திய மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் ஜயலத் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல்லின, பல கலாச்சாரச் சூழலில் தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக, இந்த பாடசாலையை நிறுவுவதற்கு 2017 பெப்ரவரியில் இரு அரசாங்கங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்திற்கான இந்திய நிதி உதவி 320 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமாகும். ஒட்டுமொத்த வளாகத் திட்டங்களின்படி, ஒக்ரோபர் 31 அன்று திறந்து வைக்கப்பட்ட கட்டடத்துடன் இணைந்து, மேலதிக கட்டுமானங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி அமரசூரிய,
இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். பாடசாலையின் கையளிப்புடன் இந்தியா தனது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளது என்றும், இனி இம்முயற்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடிப்படைக் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற கல்விக் குறைபாடுகளைச் சரிசெய்ய இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பல்வேறு வளர்ச்சி ஒத்துழைப்பு முயற்சிகளுக்கான ஆதரவைப் பாராட்டினார்.
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது உரையில்,
இரு நாடுகளின் அரசாங்கங்களும் இரு நாட்டு மக்களின் நலன் குறித்த பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். கல்வித் துறையில் உள்ள ஒத்த அணுகுமுறைகள் குறித்து அவர் விவரித்தார். இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இலங்கையில், பிரதமர் கலாநிதி அமரசூரிய தலைமையில், 2026 இல் புதிய கல்விச் சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றத்திற்கான பயணத்தில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்றும், நாட்டில் கல்வித் துறையில் தனது தாக்கமான வளர்ச்சி உதவி முயற்சிகளை இந்தியா தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.


















