-பொலிஸார் தீவிர விசாரணை-
-பா.சதீஸ்-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இரவுவேளை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் இடம்பெற்றது.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர், கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலம் சம்பவ இடத்திலிருந்து நேற்று காலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், தலையில் ஏற்பட்ட கடும் காயத்தின் காரணமாக வெளியேறிய அதிக இரத்தக்கசிவே உயிரிழப்பிற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.
உயிரிழந்தவர் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது -41) என்பவராவார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


















