-மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிப்பு –
-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 12 ஆயிரத்து 691 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13,559 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 5443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1408 குடும்பங்களை சேர்ந்த 4041 பேரும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 520 குடும்பங்களை சேர்ந்த 1811 பேரும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 264 குடும்பங்களை சேர்ந்த 588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் மீட்கப்பட்டு 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3620 குடும்பங்களை சேர்ந்த 9913 பேரும், இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3178 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
















