-பா.பிரதீபன்-
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் GMOA சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நிலவி வரும் இயற்கைப் பேரிடர் சூழலை முன்னிட்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தாய்ச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் விரிவான பேரிடர் மீட்பு மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடமாடும் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மருத்துவர்கள் வழங்கி வரும் பெரும் சேவையின் தேவையை இந்தப் பேரிடர் சூழல் மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவசர வைத்திய தேவைகளுக்காக வடமாகாணத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள (76) 220 2990 என்ற வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு தகவல் அனுப்பி, உங்களின் அவசர வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சை உதவிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















