-சரத் வீரசேகரவுக்கு எழுந்த ஐயம்-
இலங்கையின் 78வது சுதந்திர தினம் தேசியத்திற்காக கொண்டாடப்பட்டதா? அல்லது விடுதலை புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? என சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளதுடன், சுதந்திர தினத்தில் இராணுவம் பெருமைப்படுத்தப்படவில்லை எனவும் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள்.
1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர்.
2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு 2வது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.
78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.


















