சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி.க்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டு சென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன் என சுயேட்சைக் குழு யாழ் மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கூறும் போது எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அவை எனது வீட்டில் இருப்பது போன்றுதான் ‘அர்ச்சுனாவின் கொள்கலன்கள் என்றுதான் கூறுகின்றனர். இதனால் இது தொடர்பில் எனக்கு இங்கே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது.
உண்மையில் இந்த கொள்கலன்கள் பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சராக இருக்கும் போது விடுவிக்கப்பட்ட கொள்கலன்களே. நான் இந்த சபையில் கூறிய விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
இதேவேளை நான் ஒருமாத காலமாக ஐரோப்பிய பயணமொன்று சென்றிருந்தேன். அப்போது 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக எனக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இப்போதும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். விடுவிக்கப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களுக்குள் ஆயுதங்களே இருந்தன. வேண்டுமென்றால் என்னை சீ.ஐ.டி.க்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டுசென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன். அது தொடர்பில் குழுவொன்றை அமையுங்கள். பயமின்றி கூறுகின்றேன். அதில் ஆயுதங்களே இருந்தன என்றார்.


















