தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 30 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களின் விசாரணை நேற்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவிட்டது. படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டார்.

















