முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த நபரிடமிருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் தொலைபேசி மூலம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரான் அலஸ் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அவரது உத்தரவுகள் தொடர்பாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.