-19 வயதான இளைஞன் கைது-
15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் 19 வயதான இளைஞர் ஒருவர் மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மாதம்பே கலஹிடியாவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இளைஞனிடமிருந்து சிறிய லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
10ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாகக் கூறி 18 ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறினார்.
இருப்பினும், அவர் பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் அவர் காணாமல் போயுள்ளதையும் அவரது தாயார் அறிந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த மாணவி மாதம்பே, பொத்துவிலவைச் சேர்ந்த 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும் தற்போது அந்த இளைஞனும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















