டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் கல்வி உதவிக் கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
பேரிடரால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட 3,000 மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் தற்போது கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை அதிகாரிகள் மீளாய்வு செய்து வருவதாகவும், புயலால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்தல் மற்றும் மீட்டெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட 25,000 ரூபாய் மானியத்தையும் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றார். அனைத்து கொடுப்பனவுகளும் தற்போது முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் தொடர்பான மேலும் முறையீடுகளும் மதிப்பீட்டில் உள்ளன. வீடுகளை இழந்து தற்போது தற்காலிக வாடகை வீட் டில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாதாந்த வாடகை உதவி வழங்க அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்கு பொருத்தமான நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. வீட்டுவசதி கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக மதிப்பீடு மற்றும் ஒப்புதலுக்காக இந்த நிலங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















