நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன், கினிகத்தேனை நகரின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர், கினிகத்தேனை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் வலய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பேருந்துகள், தனியார் பேருந்துகள் உட்பட 65 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதிக்கப்பட்ட வாகனங்களில், வாகனத்தின் மூல வடிவத்தை மாற்றியமைத்தல், ஆபத்தான முறையில் மேலதிக பாகங்களைப் பொருத்தியிருத்தல் மற்றும் பிரேக் தொகுதிகள் சரியாக இயங்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், 4 தனியார் பேருந்துகள், 6 லொறிகள் மற்றும் எரிபொருள் தாங்கி (பௌசர்) ஒன்று உட்பட 12 வாகனங்களின் வருமான வரி உத்தரவு பத்திரங்கள் மோட்டார் வாகன பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 12 வாகனங்களின் சேவைகளையும் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் அவற்றை மோட்டார் வாகன பரிசோதகரின் மேற்பார்வைக்கு உட்படுத்தும் வரை, 14 நாட்களுக்கு அந்த வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















