2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டத்திற்கு முரணான வகையில் நட்ட ஈடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து, அப்பணத்தை மீண்டும் அறவிடுமாறு உத்தரவிடக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு இவ்வழக்கு தொடர்பான அறிவித்தல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அறிவித்தல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


















