அதிகாரிகள் சிலர் உயிருக்கு பயந்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கியதன் விளைவாகவே விவசாய நிலங்கள் நிரப்பப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாறியதாக அமைச்சர் கே.டி.லால்காந்த கூறினார்.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் காலநிலை மாற்றத்திற்கு இசைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் ஒரு அங்கமாக, எல்லங்க முகாமைத்துவக் குழுவின் பணிகளுக்கான வழிகாட்டி கையேடு விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கே.டி.லால்காந்த, மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்தத் திட்டம் நிறைவடைவது குறித்து ஒரு வகையில் கவலை ஏற்படுகிறது. ஏனெனில் இது நாட்டுக்கு மிகவும் முக்கியமானதொரு திட்டமாகும்.
நாம் வளர்ந்து, விளையாடித் திரிந்த எமது கிராமத்து குளங்களுடன் தொடர்புபட்ட இத்திட்டத்தின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நாட்டின் முழுமையான எல்லங்க குளக் கட்டமைப்பையும் மீள நிலை நிறுத்த வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
அதனால்தான், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சிறிய குளங்களை புனரமைப்பதற்காக நாம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். எமது நீர்ப்பாசனக் கட்டமைப்பை சீர்செய்யும்போது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், குளங்களுக்குள் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுவதாகும்.
தற்போது நுவரவெள குளத்தைச் சூழவுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குளங்களின் எல்லைகளைக் குறியீடு செய்வது எமக்கு முன்னாலுள்ள பாரிய சவாலாகும். கடந்த காலங்களில் மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் செயலாளர்கள், விவசாய அதிகாரிகள் எனப்பல பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இருந்தனர். சட்டங்களும் இருந்தன. இவை அனைத்தும் இருந்தபோதிலும் எமது குளக் கட்டமைப்பு அழிவடைந்து போனது. கடந்த காலங்களில் நிலவிய அரசியல் கலாசாரமே இதற்குக் காரணமாகும்.
அரசியல் பலம் படைத்தவர்களின் தேவைகளுக்காக இவை நடந்தேறின. அதிகாரிகளின் கண் முன்னாலேயே எமது நீர்ப்பாசனக் கட்டமைப்பு சிதைவடைந்துள்ளது. எமது தலைமுறைதான் இக்குளங்கள் செழிப்பாக இருந்ததையும் பார்த்தது, தற்போது அவை அழிவடைவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாம் இப்போது சரியாகத் தலையிடாவிட்டால், வரும் சந்ததியினர் இந்தக் குளங்களின் பெறுமதியை வெறும் புத்தகங்களில் மட்டுமே படிக்க வேண்டிவரும்.
எல்லங்க குளக் கட்டமைப்பையும் பிரதான குளங்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளேன். இதில் வாக்கு வங்கி அரசியல், தனிப்பட்ட நட்பு அல்லது அரசியல் செல் வாக்கு என்பவற்றுக்கு இடமில்லை. இதனை நாம் செய்தே ஆக வேண்டும்.
குளங்களுக்குச் செய்யும் நீதி என்பது நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய சேவையாகும். இனிவரும் காலங்களில் இத்திட்டங்களுக்கு அரசியல் அழுத்தங்கள் இருக்காது. எனவே, அதிகாரிகள் துணிச்சலுடன் செயற்பட வேண்டும் என்றார்.


















