மாகாணசபை தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதை அறிந்துதான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ள ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, அரசின் 20 வீதமான வாக்குவங்கி சரிந்துவிட்டதாகவும் கூறினார்.
கொழும்பில் உள்ள ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பு பிற்போடப்பட்டமைக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
கல்வி மறுசீரமைப்பை பிற்போடுமாறு நாங்கள் குறிப்பிடவில்லை. குறைப்பாடுகளை திருத்திக் கொள்ளுமாறு மாத்திரமே குறிப்பிட்டோம். பாடத்திட்டம் தயாரிப்பின்போது தோற்றம்பெற்ற குறைப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களினால் புதிய கல்விக் கொள்கை 2027 ஆம் ஆண்டுவரை பிற்போடப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்கள். ஆனால் கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதாக பிரதமர் குறிப்பிடுகிறார். மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதால் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை கவனத்திற்கொள்ள வேண்டாம் என்று அக்கட்சியின் சிரேஷ;ட உறுப்பினர்கள் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மாகாணசபைத் தேர்தல் குறித்து முன்னேற்றகரமான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவோம் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். அதனால் தேர்தலை நடத்தாது. அரசாங்கத்தின் வாக்கு வங்கி சதவீதமளவுக்கு குறைவடைந்துள்ளது என்றார்.


















