சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், சமிந்த குலரத்னவின் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தனிநபர் அளித்த முறைப்பாட்டையும் ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.
சமிந்த குலரத்ன தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில் சபாநாயகருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெற்றமை, அதிகாரப்பூர்வ வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, நாடாளுமன்ற ஊடக உபகரணங்களைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியமை, நாடாளுமன்றத்தில் கட்டணம் செலுத்தாமல் உணவு உட்கொண்டமை, சட்டவிரோதமாக விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்ற நிதியிலிருந்து ஊதியம் மற்றும் உணவு வழங்கியமை, இரண்டு அதிகாரப்பூர்வ இல்லங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கத் தடையாக இருந்தமை மற்றும் நாடாளுமன்ற நிர்வாகப் பணிகளில் சட்டவிரோதமாகத் தலையிட்டமை ஆகிய குற்றச்சாட்டில் அதில் உள்ளடங்கியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் நடத்தப்பட்ட உள்வாரி விசாரணையைத் தொடர்ந்து, சமிந்த குலரத்ன அண்மையில் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவர் பிரதி செயலாளர் நாயகமாகப் பதவியேற்கத் தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவரது நியமன நடைமுறையில் தவறுகள் இருப்பதாகவும் அந்த விசாரணையில் தெரியவந்தது. இதன் பின்னரே, அவர் சபாநாயகருக்கு எதிராக குலரத்ன ஊழல் முறைப்பாட்டை அளித்தார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு முதற்கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்திடம் கோரியுள்ளது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் சமிந்த குலரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.


















