-யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்பே நாடு திவாலானது-
-உண்மையான காரணம் ஊழல் மோசடியும், கொள்ளையும்தான் – அநுர-
இலங்கை 30 வருடகால யுத்தத்தினால் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்ததாக கூறிக்கொண்டிருந்தோம், ஆனால், யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. ஆகவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் யுத்தம் அல்ல.
நாங்கள் பின்பற்றிய பொருளாதார கொள்கையும், மோசடிகளும், இலஞ்சம், ஊழலால் போன்றவற்றினாலேயே இந்த நாடு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டமைக்கு காரணம் எனவும், யுத்தம் காரணமல்ல எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க கூறியுள்ளார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற போதைப் பொருள் அச்சுறத்தலை எதிர்கொள்வதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
எமது பொருளாதார பின்னடைவுகளை பல்வேறு காரணங்கள் காட்டினோம். சிலவேளை யுத்தத்தையும், இயற்கை அனர்த்தங்களையும், தொற்றுநோய்களையும் காரணம் காட்டினார்கள். வீழ்ச்சிகளுக்கு காரணம் தேடினார்கள். ஆனால் எந்த நிலைமைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். கடந்த காலத்தில் பாகிஸ்தான் – இந்தியா இடையில் யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்பட்டபோது எமது நாடு வீழ்ச்சியடையும் என கருதினார்கள். மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டபோது எமது நாடு வீழும் என நினைத்தார்கள்.
அமெரிக்கா எமது நாட்டுக்கு வரிவிதித்தபோது நாடு வீழ்ச்சியடையும் என்றார்கள். டித்வா புயலினால் ஏற்பட்ட போது எமது நாடு சரிவடையும் என்று கருதினார்கள். அவ்வாறான எந்தவொரு நிலைமையிலும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் நாம் பணியாற்றுகிறோம். டித்வா புயல் நிலைமையில் நாடு பின்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பலமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நிதி ஒழுங்கையும் பொருளாதாரத்தையும் தயார்படுத்தினோம். பலமான பொருளாதாரத்தை நோக்கிய திசைக்கு செல்கிறோம் என்றார்.


















