-லக்ஷ்மன் யாப்பாவின் கருத்துக்கு பிமல் பதில்-
அரசியல்ரீதியாக பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியின் வெளிப்பாடே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் விமர்சனம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாஅபேவர்தன, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினாலும், நடைமுறையில் எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது. அரச தரப்பினரின் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத் தீர்ப்புகளை நாம் கௌரவிக்கின்றோம். அமரகீர்த்தி அத்துகோரலவின் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளை, எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்.
கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட ஊழல் கோப்புகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுவதால் ஏற்பட்ட அச்சமே இத்தகைய கருத்துக்களுக்குக் காரணம்.
சட்டம் அதன் கடமையைச் செய்கின்றது, அதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை. முன்னாள் ஆட்சியாளர்கள் தேவையற்ற ஆடம்பரங்களுக்காகவும், தனிப்பட்ட பயணங்களுக்காகவும் மக்கள் பணத்தைச் செலவிட்டு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தினர். ஆனால், தற்போதைய அரசு மிகவும் இக்கட்டான பாதுகாப்புச் சூழல்களிலும், நாட்டின் மிக முக்கியமான பணிகளுக்காகவும் மட்டுமே அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில் அரச வசதிகளைப் பயன்படுத்துகின்றது. இதில் எவ்விதமான வீண்விரயமும் இல்லை.
சுதந்திர தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடி மக்கள் பணத்தை வீணடிப்பதை விட, அதன் அர்த்தத்தை உணர்ந்து எளிமையாக நடத்துவதையே இந்த அரசு விரும்பியது.
ரணவிருவர்களின் கௌரவத்தைச் சிதைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது. நாட்டின் உண்மையான மாவீரர்களுக்கான மரியாதையை இந்த அரசு எப்போதும் வழங்கும். அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் காலம் மலையேறிவிட்டது – என்றார்.


















