-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்-
எரிபொருளுக்கு நீண்டவரிசை உருவானால், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும், தொடர்ந்து சேவையை வழங்க இ.போ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்தருணத்தில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இப்போதே முறையான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தப் பயன்படுத்தப்பட்ட கியூ.ஆர் (ஞசு) முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
தற்போது நாட்டில் எவ்வித நெருக்கடியும் இல்லாத சூழலிலேயே எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறான நிலையில், உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய நெருக்கடி ஏற்படும்போது அதற்கு முகம் கொடுக்கக்கூடிய பலமான தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம். எரிபொருள் விலை அதிகரிப்பைப் பொறுத்தவரை, அண்மையில் டீசல் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டாலும், பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.
தற்போதைய இக்கட்டான சூழலில் மக்களை மேலதிகமாகப் பீதிக்குள்ளாக்கவோ அல்லது சுமையை ஏற்றவோ நாம் விரும்பவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் உருவாகுமானால், தனியார் பேருந்துகள் மணித்தியாலக் கணக்கில் அல்லது நாட்கணக்கில் அந்த வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எவ்வாறாயினும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவாகுமானால் பொதுப் போக்குவரத்துச் சேவையை முன்னெடுத்துச் செல்வது கடினமாகும். எனவே, பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய போர் மூளும் அபாயம் உள்ள நிலையில், நாட்டைப் பாதுகாப்பதற்குச் சாதூரியமான தீர்மானங்களை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.


















