-திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்-
-300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி-
-யாருக்கும் சார்புமில்லை – எதிருமில்லை – ஜனாதிபதி அநுர-
இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலை பொறுப்பேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரவு அறிவித்தார்.
கொழும்பில் நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு. எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.
இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது.
சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து, அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக செயற்றப்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரான் கப்பல் விவகாரத்திலும் மத்தியஸ்தமாகவே செயற்படுகிறோம். அதேபோல் மனிதாபிமான செயற்பாடுகளில் இருந்தும் பின் வாங்கப் போவதில்லை.

















