ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் தெரிவிக்கையில்:
இந்திய கடற்படைப் பயிற்சிக்காக ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 1971 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டரா நாயக்க காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கமைய இந்தியப் பெருங்கடலை ஒரு அமைதி வலயமென ஏற்றுக்கொண்டோம். ஆனால் இன்று நாம் பெரும் அச்சுறுத்தலில் உள்ளோம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈரான் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பெரும் வேதனையிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர்.அரசாங்கம் இதுவரை இந்தத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? எங்களை மேலும் சிக்கலில் தள்ளப்போகிறீர்களா என்றார்.


















