செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிப்படுத்தல்களை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தன்னை சுயாதீன சாட்சியாளராக விடுவிக்கும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் -சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையின் வாயிலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.
விசேட செவ்வியில் மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணிச் சந்தியில் உள்ள கோயிலுக்கு முன்புறத்திலும், நல்லூருக்குச் செல்லும் பாதையிலும் மனித உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், இராணுவத்தால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே இது மறைக்கப்படக்கூடியதொரு விடயமல்ல.
உண்மையும், நேர்மையுமான வகையில் இந்த விடயம் ஆராயப்பட வேண்டும். சோமரத்ன குறிப்பிட்டதற்கமைய செம்மணி பகுதியில் இருந்து இதுவரை 400க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனைக் காட்டிலும் மேலும் 200க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் சூழல் காணப்படுகின்றன.
கொப்பேகடுவ இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்த இளைஞர்கள் அழைத்துவரப்பட்டு மண்டைத்தீவு தோமையார் தேலாலயத்துக்கு முன்பாக இருந்த கிணற்றிலும், மண்டைத்தீவு செம்பாட்டித் தோட்ட கிணற்றிலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள்.
அவர்களின் தாய், தந்தையர் மற்றும் சகோதரர்கள் இன்னும் வாழ்கிறார்கள். ஆகவே அந்த புதைகுழிகளும் அகழப்பட வேண்டும்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வாய்கள் பிளந்தவாறு, எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மிகவும் பயங்கரமானதொரு செயற்பாடு.
உலகில் மனித குலத்துக்கு எதிராக நிகழ்ந்த மோசமான மனிதப்படுகொலை இதுவாகும். இந்த எலும்புக்கூடுகளும், அதனுடனான உண்மையும் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும். காலவோட்டத்தில் உண்மைகள் மறைக்கப்படக்கூடாது. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் உண்மை அவ்வாறே மூடி மறைக்கப்பட்டு, புதிய நூலகம் அமைக்கப்பட்டது.
ஆனால் உண்மை இறுதி வரையில் வெளிப்படுத்தப்படவில்லை. இது நாம் விட்ட தவறாகும். ஆகவே, செம்மணியில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எதிர்கால தலைமுறையினர் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த மிக மோசமான, ஆசியாவில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தின் அடையாளத்தையே செம்மணி மனித எலும்புகூடுகள் பறைசாற்றுகின்றன.
சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இவற்றை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
கால ஓட்டத்துக்கமைய உண்மையை மறைக்க இடமளிக்க முடியாது. சோமரத்ன குறிப்பிட்ட விடயங்கள் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

















