எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதி செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றிற்காக கஹதுவ பிரதேசத்திற்குச் சென்றிருந்த வேளையில், அங்கு சந்தேக நபர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இரண்டு சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அதிகாரிகள் இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர், அந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்ட தருணத்தில், அங்கிருந்த சந்தேக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், சந்தேக நபரின் கையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான சந்தேக நபருக்கு விலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் சந்தேக நபரை மீட்டுக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றிற்கு ஆதவளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

















