தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி அதிவேகமாக பரவி வருவதால், இதுவரை 2 ,இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஜிரோண்டே பகுதியில் 1,10,000 பேரும், லாண்டெஸ் பகுதியில் 31,000 பேரும் என மொத்தம் 1,41,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் தீ சூழ்ந்ததால் சிலர் படகுகள் மூலமாகவும் தப்பியுள்ளனர். மேலும் 53 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
மாட்ரிட் மற்றும் அவிலா மாகாணங்களில் தீ தீவிரமடைந்ததால் 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மாட்ரிட் வரலாற்றிலேயே மிக மோசமான தீ விபத்து என்பதால், அங்கு முதன்முறையாக தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
39°C-க்கும் அதிகமான கடும் வெப்ப அலை, பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தீயணைப்பு வீரர்களால் தீயை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஜிரோண்டே பகுதியில் 42 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இரு நாடுகளிலும் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
தற்போது காட்டுத்தீ பிரான்ஸின் போர்டோ பெருநகரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், அதைத் தடுக்கும் பணிகளில் 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


















