கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயமடைந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதன்போது, படுகாயமடைந்திருந்த நபர் உடனடியாக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஆவார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மருமகன் கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபரான மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


















