டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் நேற்றைய தினம் (10.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
சாவற்கட்டு கடற்றொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களிடமிருந்து உரிய அனுமதிகள் பெறப்பட்டதையடுத்து, கடற்றொழில் அமைச்சினால் முதற்கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இறங்குதுறையில் தேங்கியுள்ள பாசிகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், மண் நிரப்பி இறங்குதுறையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றி தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.
இறங்குதுறை புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பிரதேச செயலாளர், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன் உள்ளிட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான சுந்தரமூர்த்தி கபிலன், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த பெருமளவான கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

















