வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் ‘கறுப்பு ஒக்டோபர்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கவுள்ள நிகழ்வு, எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ் – ஷஹீத் அஹமட் லெப்பே ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள், தமிழ் சிங்கள சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். சிவில் மத்திய நிலையத் தலைவர் அருண் சித்தார்த் கலந்து கொள்ளவுள்ளார்.
‘கறுப்பு அக்டோபர்’ என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயரச் சம்பவத்தைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வில் சுமார் 75,000 முஸ்லிம்கள் 24 மணி நேர அவகாசத்தில், சொத்துக்களை இழந்து, உடுத்திய உடைகளுடன் வெளியேற்றப்பட்டனர். இது முஸ்லிம்களால் ‘கறுப்பு அக்டோபர்’ என அழைக்கப்படுகிறது.

















