வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவு பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பலருக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி; உத்தியோகத்தர்களுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோஷங்களையும் எழுப்பி இருந்தனர்.


















