-சிவசேனை அமைப்பு எச்சரிக்கை-
வட மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின், பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.
யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது.
விவிலியம் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை, இந்து மாணவர்களையும் விவிலியம் என்கின்ற பைபிள் நூலை வழங்குவதற்கு திணிப்பதாக அமைகிறது.
குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை.
அவ்வாறான அமைப்பு ஒன்றை வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம்.
குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில், பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


















