உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த கணினியை திறந்தால் இலங்கையில் நிலவிய யுத்த நிலைமை குறித்த தகவல்கள் முழு உலகிற்கும் அம்பலமாகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் நாட்டின் உளவுத்துறை தகவல்களும், யுத்த நிலைமை குறித்த தகவல்களும் சமூகத்திற்கு வெளிப்படக்கூடும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
இராணுவ உளவுத்துறை
இந்த நிலையில் அண்மையில் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சலேயின் கடந்தகால பின்னணியை வெளிப்படுத்தினர்.
போர் நிலவிய 2006-2009 காலப்பகுதியில் சலே பிரான்ஸில் தங்கியிருந்தார். 2012 ஆம் ஆண்டிலேயே அவர் இராணுவ உளவுத்துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சலேயை அரச உளவுச் சேவையின் பணிப்பாளராக நியமித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து
இலங்கை வரலாற்றில் பொலிஸ் அதிகாரி அல்லாத ஒரு இராணுவ அதிகாரி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கோட்டாபயவுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு அதிகாரிதான் சலே… என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்கள் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட கணினியில் இருக்குமானால், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அதைவிட பெரிய ஆபத்து வேறு ஏதேனும் இருக்க முடியுமா என ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் பலத்த குரலில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















