பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் சம்பந்தப்பட்டுள்ளார் என சிவில் புலனாய்வு முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹாவத்த தெரிவித்துள்ளதாவது,
2024 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் போது இந்த திட்டம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செப்டம்பர் 18 ஆம் திகதி அவசரமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
‘சன்பவர்’ என்ற நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்குவதில் சிறிதரன் எம்.பி. இடைத்தரகராக செயல்பட்டதாகவும், குறித்த நிறுவனம் அதன் ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாததால், மாதத்திற்கு ரூபா 5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிறுவனமாகும்.
அதன் பின்னர், ‘யுனைடட் சோளார் பவர்’ என்ற நிறுவனத்தை நிறுவி காலாவதியான சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தங்களை புதிய நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆனால் ‘சன்பவர்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவே குறித்த நிறுவனத்தின் இயக்குனர்களாக செயற்பட்டுள்ளனர்.
இந்த சூரிய மின்சக்தி திட்டத்திற்காக கிளிநொச்சி பிரதேசத்தில் 70 மில்லியன் ரூபாவில் காணி பெறப்பட்டுள்ளது. இந்த காணியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான திட்டம் சிவஞானம் சிறிதரன் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக 40 மில்லியன் ரூபா அவரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளதோடு 30 மில்லியன் ரூபா அவரின் மகனின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தக் கோரியே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நாங்களே முறைப்பாடு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


















